சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சிபுரம் ,ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் மோந்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது இன்று தீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ளதால், கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.



