கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு உள்ளிட்ட பல சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது.
இது போன்ற குற்ற செயல்களை தடுக்கும் விதமாக மாநிலஅரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அவர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற நடவடிக்கைகளில் பல சமூக விரோத கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படி திருட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் விலை உயர்ந்த பொருட்களை திருடினால் கூட பரவாயில்லை. காலில் அணியும் செருப்பை கூட திருடும் கும்பல் இருக்கிறது என்று நினைத்தால் அழுவதா? சிரிப்பதா? என்று கூட தெரியவில்லை.
சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்துள்ள மாடம்பாக்கம் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக காலணிகள் காணாமல் போய் கொண்டு இருந்த காரணத்தால், அந்த பகுதி மக்கள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த கண்காணிப்பு கேமராவில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு மர்ம நபர் படிக்கட்டுகளில் தவழ்ந்து வந்து காரணிகளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து ஆதாரங்களுடன் அந்த பகுதி மக்கள் காவல்துறையிடம் புகார் வழங்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளின் உதவியுடன் மர்ம நபரை மிக தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் கேம்ப்ரோடு பகுதியில் இருக்கின்ற ஒரு கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த விகாஷ்குமார், ரோகித்குமார் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அருள் எஃப்ரின் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் மூவரும் ஒன்றாக இணைந்து வீடு, வீடாக காலணிகளைத் தேடி அதனை பாலிஷ் போட்டு பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.