இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்நிலையில் தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக தமிழ்ப்பாட ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு, 15-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள்கள் பெறப்பட வேண்டும்.
தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளராக நியமித்தல் கூடாது.ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான வினாத்தாள் கட்டுக்களை தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்விற்கான வினாத்தாள் தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு முறையே காலை 10 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும். தேர்வு நேரத்தில் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்திலிருந்து வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள தேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் அவர்களுடைய பதிவெண்ணிற்குரியவை என்பதை உறுதி செய்து கொண்டு மாணவர் மற்றும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.
நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர் முத்திரையுடன் சான்றொப்பம் பெற வேண்டும். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.