வரும் 13-ம் தேதி தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா..!

illayaraja 2025

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.


இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்; இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கிய இளையராஜாவின் இசைப்பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இளையராஜா. முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் முதல் நேரடி சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், மார்ச் 2-ம் தேதி முதல்வர் ஸ்டாலின், இளையராஜா வீட்டுக்கு சென்று பாராட்டினார். தொடர்ந்து லண்டன் சென்று சிம்பொனி சாதனை நிகழ்த்தி சென்னை திரும்பிய நிலையில், முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தார். இதன்பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘இளையராஜாவின் அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்’ என அறிவித்திருந்தார்.

அதன்படி, வரும் செப்.13-ம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன்விழா காணும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசின் சார்பில் மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இன்னிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசைநிகழ்ச்சியும் நடைபெறும். விழாவில், துணை முதல்வர் உதயநிதி வரவேற்புரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றுகிறார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சாதி எண்ணம் உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்..! அரசு அதிரடி உத்தரவு...!

Wed Sep 10 , 2025
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் […]
tn school 2025

You May Like