ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டிக்கும் விதமாக, நாடாளுமன்றத்துக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர்.
அதாவது மோடி என்ற பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற ஒருவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்படுவார் தற்சமயம் ராகுல் காந்தி இந்த பிரிவுகளின் கீழே தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே வயநாடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நேற்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள். அதன்படி தலைநகர் டெல்லியில் ஆரம்பித்து அனைத்து மாநிலங்களில் உள்ள காந்தி சிலைகள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகங்கள் உள்ளிட்ட அவற்றின் முன்னர் இந்த சத்திய கிரக போராட்டம் காலை 10 மணி முதல் மாலை வரையில் நடைபெற்றது. நாடு முழுவதும் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இத்தகைய சூழ்நிலையில்தான் தமிழக சட்டமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வருகை தந்தனர். அதேபோல நாடாளுமன்றத்திற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கருப்பு உடை அணிந்து வருகை தந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த கனிமொழி, கலாநிதிமாறன், செந்தில்குமார், டி ஆர் பாலு போன்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருப்பு உடை அணிந்து சென்றனர். எல்லோரும் ஒன்றாக நின்று புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர்.