தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வரும் 14ஆம் தேதி வரை சிறப்புத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள், துணை மற்றும் உதவி ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்,
➣ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அறநிலையத்துறை திருக்கோவில்களிலும் ஆகஸ்ட் 10 முதல் 14 வரை (5 நாட்கள்) சிறப்புத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
➣ கருவறை, அர்த்தமண்டபம், பிரகாரங்கள் மற்றும் நடைபாதைகள் வரை முழுமையாகத் தூய்மை செய்யப்பட்டுத் தண்ணீரில் கழுவிப் பராமரிக்கப்பட வேண்டும்.
➣ ராஜகோபுரங்கள், விமானங்கள், தூண்கள் மற்றும் மதில் சுவர்களில் உள்ள தூசுகள், ஒட்டடைகள் மற்றும் தேவையற்ற செடிகள் அகற்றப்பட வேண்டும். உயரத்தில் பணிபுரிவோர் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.
➣ கோவில் வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் கட்டுமானக் கழிவுகள், பயன்பாடற்ற மரப்பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பொருட்கள் அகற்றப்பட்டுத் தனி அறையில் பூட்டி வைக்கப்பட வேண்டும். அவை ஏலம் அல்லது ஒப்பந்தப்புள்ளி வாயிலாக விற்பனை செய்யப்பட வேண்டும்.
➣ தரைதளம் அமைக்கப்படாத கோவில் நிலங்களில் பழைய மண்ணை அகற்றிவிட்டுப் புதிய செம்மண் நிரப்பி பூச்செடிகள் மற்றும் புல்வெளிகள் அமைத்துப் பசுமையாக்க வேண்டும்.
➣ மடப்பள்ளிகள், அன்னதானக் கூடங்கள், சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு சேமிப்பு அறைகளைத் தினமும் தூய்மை செய்து எலி, பூச்சிகள் வராதபடி தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.
➣ கோசாலைகளில் கிருமிநாசினி தெளித்துத் தூய்மை பாராமரிக்க வேண்டும்; திருக்குளங்களில் மிதக்கும் பாசி மற்றும் நெகிழி கழிவுகளை சுத்தப்படுத்த வேண்டும்.
➣ கோவிலுக்கு வெளியே உள்ள வெளிப்புறப் பகுதிகளை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read More : கையில் “நாட்டாமை குடும்பம்” டாட்டூ இருக்கா? உடனே என்னை சந்திக்கலாம்..!! சரத்குமார் பரபரப்பு அறிவிப்பு..!!



