பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என்று அண்மையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது திடீரென பல்லாயிரக்கணக்கான சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீடு குறித்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருவதால் பொதுமக்களும் சொத்து உரிமையாளர்களும் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முன்னதாக கணக்கிடப்பட்ட போது குறைவாக வரி மதிப்பிடப்பட்டிருந்த சுமார் 3.5 லட்சம் சொத்துக்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு மட்டுமே இந்த மறுமதிப்பீடு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ள 3.04 லட்சம் குடியிருப்பு சொத்துக்களில், 55 சதவீத கட்டிடங்களுக்கு வரி உயர்வு ரூ.1,000-க்கும் குறைவாகவே உள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக 95 சதவீத சொத்துக்களுக்கு இந்த வரி உயர்வு ரூ.5,000-க்குள் தான் இருக்கும் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த தவறுகளைக் கண்டறிய ட்ரோன் அடிப்படையிலான GIS நில அளவை, செயற்கைக்கோள் தரவுகள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் ஜிஎஸ்டி துறைகளின் தகவல்கள் ஆகியவை உரிமையாளர்களின் விவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகள் எனப் பதிவு செய்துவிட்டு, அங்கு வணிகச் செயல்பாடுகள் நடைபெற்று வந்தது போன்ற பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



