ரஷ்யா-உக்ரைன் போரில் வடகொரியாவின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ரஷ்யாவுக்கு வீரர்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி வந்த வடகொரியா, தற்போது ட்ரோன் இயக்குநர்களையும் அனுப்பியுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறையின் துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் வாடிம் ஸ்கிபிட்ஸ்கி கூறிய தகவலின்படி, ரஷ்யாவில் புதிதாக சுமார் 8,500 வடகொரிய வீரர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 400 பேர் ட்ரோன்களை இயக்குவதற்கான பயிற்சி பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரஷ்யாவுக்குள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதுடன், உக்ரைனில் உள்ள இலக்குகளை கண்டறிந்து தாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த 8,500 வீரர்களில் சுமார் 1,000 பேர் பொறியியல் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலான வடகொரிய வீரர்கள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த வீரர்கள் நேரடியாக உக்ரைனுக்குள் சென்று சண்டையிட வாய்ப்பு குறைவு என உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பின்பகுதிகளில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர்கள் கவனிக்கலாம். இதனால் அந்தப் பணிகளில் இருந்த ரஷ்ய வீரர்களை முன்களத்துக்கு அனுப்ப ரஷ்யாவுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே செப்டம்பர் மாதம் சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ரஷ்யா, வடகொரியாவிடம் இருந்து மேலும் 50,000 வீரர்களை கேட்கலாம் என உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சுமார் 25,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேலும் 50,000 வீரர்கள் அனுப்பப்பட்டால் ரஷ்யாவுக்கான வடகொரியாவின் ராணுவ உதவி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
வீரர்களை மட்டும் வடகொரியா அனுப்பவில்லை. ரஷ்யாவுக்கு KN-23 மற்றும் KN-24 வகையைச் சேர்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வழங்கியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக குறைந்தது 150 ஏவுகணைகள் வழங்கப்பட்டதாகவும், மேலும் 120 ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வடகொரியா பெற விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே Pantsir-S1 வான் பாதுகாப்பு அமைப்பை ரஷ்யா வடகொரியாவுக்கு வழங்கியுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவுக்கு வீரர்கள், ட்ரோன் ஆபரேட்டர்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்குவதுடன், அதற்கு பதிலாக நவீன ராணுவ தொழில்நுட்பத்தைப் பெறும் வகையில் வடகொரியா தனது ராணுவ ஒத்துழைப்பை ரஷ்யாவுடன் மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
Also Read: சிறையில் இருக்கும் ரவுடியுடன் வீடியோ கால்; கேமரா முன் ஆடைகளை கழற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!



