அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமாக, உடற்கல்வி இயக்குநர் நிலை-2 நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, உடற்கல்வி ஆசிரியர் பணியில் இருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆக பதவி உயர்வு பெற, தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும்.
அந்த வகையில், இந்த பட்டியலில் இளநிலையில் இரட்டை பட்டப் படிப்பு படித்தவர்களின் பெயரை சேர்க்கக் கூடாது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதேனும் இருக்கிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக பெயர் சேர்க்க பரிந்துரைத்தாலோ அல்லது பெயர் விடுபட்டதாக தெரிவித்து முறையீடு ஏதும் பின்னர் பெறப்பட்டாலோ அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



