அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது காரை ஓரமாக பார்க் செய்யுங்கள் என்று கூறி அஜித்திடம் சாவியை கொடுத்துள்ளார்.
தனக்கு கார் ஓட்ட தெரியாததால் வேறு ஒருவரை காரை இயக்க சொல்லி ஓரமாக பார்க் செய்ய வைத்ததாக சொல்லப்படுகிறது. சாமி தரிசனம் செய்து விட்டு நிக்தா மற்றும் அவரது தாயார் காருக்கு திரும்பிய போது காரில் இருந்த 9.5 சவரன் நகையை காணவில்லை. இது குறித்து அங்கு பணியில் இருந்த தற்காலிக ஊழியர் அஜித்குமாரிடம் நிக்தா கேட்டுள்ளார். அப்போது தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று அஜித்குமார் கூறியுள்ளார்.
இதையடுத்து காரில் இருந்த நகையை காணவில்லை என்றும் நடந்த சம்பவத்தை கூறியும் நிக்தா போலீசில் புகார் அளித்து இருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது திடீரென அஜித்குமாருக்கு உடல் நலபாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, உடனடியாக சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அஜித்குமாரை அழைத்து சென்று இருக்கிறார்கள். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அஜித்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இது குறித்த தகவல் கிடைத்தது, காவல் நிலையத்திற்கு வந்த அஜித்குமரின் பெற்றோர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் புயலை கிளப்பிய இந்த சம்பவத்தில், உயிரிழந்த அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. உடலின் வெளிபுறம் மட்டும் அல்லாமல் உட்புறங்களிலும் ரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அஜித் குமார் உடலில் உள்ள காயங்களை வைத்து பார்க்கும் போது அவர் சித்திரவதைக்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் நடைபெறும் பிரேத பரிசோதனை ஐந்து மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Read more: டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை? இரட்டை நிலைப்பாடு ஏன்? தமிழக அரசுக்கு சரமாரி உயர்நீதிமன்றம் கேள்வி..