தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதகற்காக அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார்.. அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களும், இந்திய தூதரக அலுவலர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.. ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் நேற்று நடந்த தமிழ் கனவு – ஜெர்மனி வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார்..
இன்று கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை நூலகத்தை பார்வையிட்டார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் பதிவிட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான #Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு.. அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த நூலக விசிட் அமைந்தது.” என்று பதிவிட்டிருந்தார்..
இந்த நிலையில் முதல்வரின் இந்த கருத்தை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.. அவரின் பதிவில் “ ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், “போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு” என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.
முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..