சென்னை மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் இவருடைய மகன் ராமச்சந்திரன்(36) வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு வெகு நேரம் ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிக்கு ஆளான அவருடைய குடும்பத்தினர் பல பகுதிகளில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை.
இத்தகைய நிலையில், காணாமல் போன ராமச்சந்திரனின் இருசக்கர வாகனம் அடையாறு திரு வி கா பாலம் அருகே நிற்பதாக அவரது தந்தை லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில், நேற்று காலை தீயணைப்பு படை வீரர்கள் அடையாற்றில் ரப்பர் படகு மூலமாக தேடுதல் பணியை ஆரம்பித்தனர்.
இதற்கு நடுவே அடையாறு பாலத்தின் கீழ் இராமச்சந்திரன் சடலம் மிதந்து கொண்டிருந்தது. பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இது குறித்து அடுத்த கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.