காலையில் இட்லி அல்லது தோசை மாவு இல்லையென்றால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் கோதுமை ரவை இருந்தாலே, சில எளிய பொருட்களுடன் சுவையான மற்றும் மென்மையான பணியாரத்தை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தேங்காய் சட்னியை சைடு டிஷ்ஷாக பரிமாறினால், காலை உணவு இன்னும் ருசியாக மாறும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த காம்பினேஷன், குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டிபன் வகையாகும்.
இந்த ரெசிபியை தயாரிக்க முதலில் ஒன்றரை கப் கோதுமை ரவையை நன்றாக கழுவி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சுமார் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அந்த நேரத்தில் சட்னியை தயாரித்துக் கொள்ளலாம். அதற்காக ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் மூன்று பச்சை மிளகாயை சேர்த்து லேசாக வதக்குங்கள். வெங்காயம் மென்மையாக மாறியதும் சிறிய துண்டு புளி மற்றும் அரை மூடி துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கி ஆறவிடுங்கள்.
பின்னர் இந்தக் கலவையை மிக்சியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஓரளவு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னியின் பதத்தை சரிசெய்து, கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான தேங்காய் சட்னி தயார்.
இப்போது பணியாரத்திற்கான மாவை தயாரிக்கலாம். ஊறவைத்த கோதுமை ரவையில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி, அதை மிக்சியில் போட்டு, அதனுடன் முக்கால் கப் கடலை மாவு, கால் கப் பச்சரிசி மாவு மற்றும் அரை கப் கெட்டி தயிர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், துருவிய தேங்காய், துருவிய கேரட், வெங்காயத்தாள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். இறுதியாக ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, மாவை சுமார் பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்க விடுங்கள். மாவு அதிகமாக கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து பணியாரத்திற்கு ஏற்ற பதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றுங்கள். மிதமான தீயில் ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கத்தையும் பொன்னிறமாக வேகவிடுங்கள். இருபுறமும் மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறலாம். சூடான கோதுமை ரவை பணியாரத்தை காரமான தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், காலை உணவு சுவையோடு நிறைவடையும்.
Also Read: மருந்து மட்டும் போதாது… சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இயற்கை உணவுகள்!


