நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நெல் தேங்கியது வழக்கத்தை விட அதிக நெல்வரத்து, விரைவாக கொள்முதல் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகளிடம் நெல் தேங்கியது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், கடந்த அக்டோபரில் மழை பெய்தது. இதனால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. இந்த நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடு பட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என் வலியுறுத்தி உள்ளார்.



