திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் இருந்து வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த இவருடைய கணவர் முரளி தரன். இவர், ஊராட்சி நிர்வாகத்தை கவனித்து வந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில், கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களை இவர் பணி செய்ய விடாமல் தொந்தரவு செய்வதாகவும் சொல்லப்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் தான் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் ரகுவரனை தகாத வார்த்தைகளால் வசைப்பாடி, கிராம சபை கூட்டத் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போட விடாமல் தடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் ரகுவரன் முரளிதரன் மீது புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளில் திட்டுதல் போன்ற பிரிவுகளின் முரளிதரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.