மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம், இயற்கை எழிலும் சுற்றுலாத்தலங்களாலும் தமிழ்நாட்டின் முக்கிய டூரிஸ்ட் மையமாக திகழ்கிறது. குறிப்பாக குற்றாலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அருவிகள்தான். ஆண்டுதோறும் சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றனர்.
மூலிகை செடிகளுக்கு நடுவே மலைப்பகுதிகளில் இருந்து பேரொலியுடன் கொட்டும் அருவிகளில் குளிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு தனி அனுபவமாக உள்ளது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, குற்றாலம் ஐந்து அருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட இடங்களில் சீசன் நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் குற்றாலத்திற்கு வரும் பலருக்கும் அருகில் அமைந்துள்ள அழகிய அணைக்கட்டுகள் குறித்து பெரிதாக தெரியாமல் போகிறது. அருவிகளைத் தாண்டி இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அணைகளும் தற்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
மேக்கரை அடவி நயினார் டேம்: குற்றாலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மேக்கரை கிராமம் அருகே அமைந்துள்ள இந்த அணை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் காணப்படுகிறது. அணை நிரம்பி வழியும் பகுதி அருவி போல காட்சியளிப்பதால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். அனைத்து வயதினரும் பாதுகாப்பாக குளிக்க ஏற்ற இடமாக இது பார்க்கப்படுகிறது.
குண்டாறு டேம்: குற்றாலம் – செங்கோட்டை சாலையில் அமைந்துள்ள இந்த அணை, குற்றாலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் அருவியைப் போல காட்சியளிப்பதால், இங்கு சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். மலைகள் மற்றும் பசுமை சூழ்ந்த இந்த பகுதி புகைப்பட ஆர்வலர்களையும் கவர்கிறது.
ராமநதி டேம்: அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் மாதாபுரம் அருகே அமைந்துள்ள இந்த அணை, குற்றாலத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மற்ற அணைகளில் போல இல்லாமல், மலையிலிருந்து ஆற்றாக வரும் தண்ணீரில் நேரடியாக குளிக்கலாம் என்பதே இந்த இடத்தின் தனிச்சிறப்பு. மரங்கள் சூழ்ந்த அமைதியான சூழல் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.
கடனா நதி: ஆழ்வார்குறிச்சி அருகே அமைந்துள்ள இந்த அணை, குற்றாலத்தில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சமீபத்திய மழையால் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், இயற்கை காட்சிகள் கண்கவர் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. குடும்பத்துடன் அமைதியாக நேரம் செலவிட ஏற்ற இடமாக இது பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த 4 அணைகளும் நிரம்பியுள்ள நிலையில், சீசன் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலத்திற்கு வருபவர்கள் அருவிகளுடன் இந்த அணைப்பகுதிகளுக்கும் சென்று இயற்கையை ரசித்து மகிழலாம் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



