புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.. பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்..!

bhogi

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது..

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.


ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால் போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள். ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல். கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர். டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு. வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்த 2026 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.

Read More : “ இது தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளி.. இதற்கான பதில் திமுகவுக்கு கிடைக்கும்..” அண்ணாமலை காட்டம்..!

RUPA

Next Post

பராசக்தி படத்திற்கும் சென்சார் சிக்கல்..! 23 இடங்களில் கட்? 10-ம் தேதி ரிலீஸ் ஆகுமா?

Thu Jan 8 , 2026
சுதா கோங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இந்த படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.. அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.. இந்த படம் முதலில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஜனவரி 9-ம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.. பராசக்தி […]
parasakthi 1

You May Like