தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை..
மறுபுறம், திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் தனித்தனியாக வெற்றி பெற்றுள்ளன. கூட்டணியாகப் பார்த்தால், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 1967 முதல் தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக என்ற இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. அந்த வரலாற்றை மாற்றும் வகையில், விஜயின் தவெக தனது முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்று முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை தவெக பெறவில்லை. மேலும், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால், தவெகவின் எம்எல்ஏ எண்ணிக்கை 107 ஆக குறையும். இதனால், குறைந்தது மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள்ளது.. மேலும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதவுக்கு விஜய்க்கு தேவை..
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் போன்ற கட்சிகள் தலா 2 இடங்களிலும், தேமுதிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், அதிமுக கூட்டணியில் பாமக 4 இடங்களிலும், பாஜக மற்றும் அமமுக தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இக்கட்சிகளில் சிலர் ஆதரவு அளித்தால்தான் தவெகவிற்கு தேவையான எண்ணிக்கை கிடைக்கும் நிலை உள்ளது.
இந்த அரசியல் கணக்குகளுக்கு மத்தியில் தான், திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2.5 ஆண்டுகள் ஸ்டாலின் முதல்வராக இருப்பார் என்றும், 2.5 ஆண்டுகள் இபிஎஸ் முதல்வராக இருப்பார் என்றும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், “இப்படியான விஷயம் நடக்கக்கூடாது. நான் கேட்கும் சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இதை செய்யாதீங்க.. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், அரசியல் விமர்சகரான சுமந்த் ராமன் “நாங்கள் கேட்கும் தகவல்கள் மிகவும் வினோதமாக உள்ளன. அது உண்மையில்லை என்று நம்புகிறோம்” என்று தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவர்களின் கருத்துகள், திமுக – அதிமுக கூட்டணி குறித்த பரவும் தகவல்களை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தவெக ஆட்சி அமைக்க முயற்சிக்கையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரெதிர் களத்தில் இருந்து அரசியல் செய்து வந்த திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாக பரவும் தகவல்கள் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Read More : ஆரம்பமே முட்டுக்கட்டை போடும் ஆளுநர்.. நாளை விஜய் பதவியேற்பு விழா நடக்குமா..?



