தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனை(ஹனி) வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இதுகுறித்து ஒந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேன் இயற்கையான இனிப்பு என்பது மட்டுமன்றி, உடலின் நச்சு நீக்கம், சீரான ரத்த ஓட்டத்துக்கும் உதவக்கூடியது. காலையில் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் சளி, இருமல் சரியாகும். குழந்தைகளுக்கும் தேன் கலந்த வெந்நீரை பருகக் கொடுத்தால் சளி, சைனஸ், ஆஸ்துமா, இளைப்பு ஆகியவை கட்டுக்குள் வரும். எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் வெந்நீர் உதவுகிறது.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்குவதோடு, கழிவுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது. தேனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் சக்தி உள்ளது. அதனால் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.
தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, காய்ச்சலில் இருந்து விலகி இருக்கலாம். மேலும் இது தொண்டையில் இருக்கும் புண் மற்றும் வறட்டு இருமலையும் தடுக்கும். வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபட இந்த தேன் கலந்த நீர் உதவும். இதேபோல், எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும். அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும். இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும்.