காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இத்தகைய பேச்சுவார்த்தைகளை முதலமைச்சர் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரியில் தமிழகத்திற்கான உரிய நீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு ஒருபோதும் மதித்து நடந்துகொள்வதில்லை என சாடினார். காவிரி ஆற்றில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விவகாரத்தில் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்றார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப் போராட்டங்கள் மற்றும் பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக தமிழகத்திற்கான உரிமை நீர் பெற்றுத் தரப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளதால், மேகதாது பிரச்சனைக்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டார்.
மேலும், இரு மாநிலங்களின் சுமுக உறவைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என எச்சரித்தார். இத்தகைய உணர்வுப்பூர்வமான மற்றும் மாநில உரிமை சார்ந்த முக்கியப் பிரச்சனையில் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், இக்கோரிக்கையை பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியும் முதல்வர் விஜய் இன்னும் மௌனம் காத்து வருவதாக விமர்சித்தார்.
Read More : “இவன் இருந்தா நம்ம சேர முடியாது…” கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட பிளான்… இறுதியில் கணவர் கொடுத்த ட்விஸ்ட்!



