காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட திரையிடலை கர்நாடக திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென நிறுத்தி வைத்துள்ளனர்.
காவிரியில் இருந்து உரிய நீரை திறக்கக் கோரி தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், காவிரி பிரச்சனை குறித்துப் பேசுவதற்காக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு சென்று அம்மாநில முதலமைச்சரை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போதைய சூழல் சுமுகமாக இல்லாததால் இந்த சந்திப்பை தவிர்க்குமாறு கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தி கன்னட அமைப்புகள் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாநில தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த அரசியல் கொந்தளிப்புகளுக்கு இடையே, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்னிலைப்படுத்தி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெங்களூருவில் உள்ள பிரபல ஊர்வசி திரையரங்கில் காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் படத்தின் திரையிடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விஜய்யின் போஸ்டர்கள் மற்றும் கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன. அங்கே மாற்றுத் திரைப்படமாக ‘காரவல்லி’ என்ற கன்னட படம் திரையிடப்பட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்கு முன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மாண்டியா பகுதியில் உள்ள திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த படத்தின் பேனர்களை கன்னட ஆதரவு அமைப்பினர் அதிரடியாக அகற்றியுள்ளனர். படம் ரத்து செய்யப்பட்டது மற்றும் கட்-அவுட்டுகள் அகற்றப்பட்ட சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து, கர்நாடக பிலிம் சேம்பர் (Film Chamber) நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் திரையரங்குகளின் பாதுகாப்பு மற்றும் ‘ஜனநாயகன்’ படப் திரையிடல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : அதுக்கு இது நேரமில்லை முதல்வரே..!! விஜயை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி..!!



