சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருந்த தொழிலாளியிடம், உல்லாச ஆசை காட்டி வரவழைத்துத் தாக்கி, பணம் மற்றும் செல்போனைப் பறித்துச் சென்ற 3 இளம்பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட ‘ஹனி டிராப்’ கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், சென்னை தரமணியில் உள்ள விடுதியொன்றில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, தனது சொந்த ஊர் தோட்டத்தில் விளைந்த கரும்புகளைத் தந்தையுடன் சேர்ந்து கோயம்பேடு சந்தைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்துள்ளார். வியாபாரம் முடிந்ததும் தந்தை ஊருக்குத் திரும்பிவிட்ட நிலையில், மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த இளம்பெண் ஒருவர், அந்த வாலிபரிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். போதை மற்றும் ஆசை வார்த்தைகளில் மயங்கிய வாலிபரை, ஏற்கனவே இரண்டு பெண்கள் காத்திருப்பதாகக் கூறி ஆட்டோவில் ஏற்றி காளியம்மன் கோவில் தெருவில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்குள்ள விடுதி நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஏமாற்றத்துடன் வெளியே வந்த தொழிலாளியிடம், உடன் வந்த பெண்கள் திடீரென தகராறு செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆட்டோ ஓட்டுநரும் அந்த மூன்று பெண்களும் ஒன்றுசேர்ந்து வாலிபரை சரமாரியாகத் தாக்கியதோடு, கல்லாலும் முகத்தில் தாக்கியுள்ளனர். இதில் முகத்தில் பலத்த காயமடைந்த வாலிபரிடமிருந்து ரூ.5,000 ரொக்கம் மற்றும் செல்போனைப் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் ஆட்டோவில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், தொழிலாளியிடம் கைவரிசை காட்டியது எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் மற்றும் செம்மஞ்சேரியைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக நான்கு பேரையும் சுற்றிவளைத்துக் கைது செய்த காவல்துறையினர், இதே பாணியில் கோயம்பேடு பகுதியில் இவர்கள் வேறு யாரிடமாவது கைவரிசை காட்டியுள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


