வீட்டில் வெந்நீர் கொட்டிய குழந்தை மருத்துவமனைக்குச் சென்றபோது சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சார்ந்தவர் மணிமாறன். இவரது மகனுக்கு வருகின்ற திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருப்பதால் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து உறவினர்கள் குன்னூர் வந்திருந்தனர். இவரது வீட்டில் நேற்று ஹீட்டரின் மூலம் வெந்நீர் தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சரண்யாவின் உடல் வெந்நீர் பாத்திரத்தில் பட்டதால் அவர் மீது வெந்நீர் கொட்டியது. இதில் குழந்தையின் உடல் வெந்ததால் குழந்தை வலியால் துடித்தது. இதனைத் தொடர்ந்து குழந்தையை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நேரத்தில் குறிப்பிட்ட மருத்துவர்களும் பணியிலில்லை.
பணியிலிருந்த செவிலியர்களே குழந்தைக்கு களிம்பு போடுவது மருந்து கொடுப்பது என சிகிச்சை அளித்துள்ளனர். குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி கேட்டுள்ளனர். அதற்கும் மறுத்த மருத்துவமனை நிர்வாகம் இங்கேயே சிகிச்சை எடுக்கலாம் என தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குழந்தைக்கு ஜூஸ் கொண்டுவர அவரது உறவினர்களிடம் கூறியுள்ளனர். அவர்களும் மருத்துவமனை ஊழியர்களின் பேச்சை நம்பி குழந்தைக்கு ஜூஸ் கொடுத்துள்ளனர். அப்போது குழந்தையின் வாயிலிருந்து நுரைத்தள்ளி பரிதாபமாக பலியாகி இருக்கிறது குழந்தை. அப்போது வேறு பணி நேரத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் அவசரமாக வந்து குழந்தைக்கு ஏன் ஜூஸ் கொடுத்தீர்கள்? அதை விஷமாக மாறிவிட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால் தான் குழந்தை இறந்து விட்டது எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் மற்றும் ஏ டி எஸ் பி ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் குழந்தையின் உடலை வாங்க சம்மதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.