தென்மேற்கு வங்கக்கடலில் நவ.9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் 10,11 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகின்றது. இதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கற்கரை பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நவ.9ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பின் 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 10 மற்றும் 11ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரி, நெல்லை., தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவள்ளுர், காஞ்சி, விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சியில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.