சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் சந்திப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு தொடர்பாகவும் எதிர்கால அரசியல் திட்டம் தொடர்பாகவும் டிடிவி தினகரன் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது பன்னீர்செல்வம் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் சையது கான் என்ற எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவர் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் எனக்கு விருப்பம் தான் எனவும், பன்னீர்செல்வத்திடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றும் கூறினேன் என தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
மேலும் பேசிய அவர், ஆனாலும் நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது கூட தர்ம யுத்தத்தை எதற்காக நடத்தினேன்? என்று என்னிடம் பன்னீர்செல்வம் கூறி இருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதல்வர் மற்றும் அதிமுகவின் பொது செயலாளர் வரவேண்டும் என்று நானும் தான் விரும்பினேன். ஆனாலும் நீங்கள் எனக்கு முதல்வர் பதவி கொடுத்து அதன் பிறகு ஒன்றரை மாத காலத்தில் என்னை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்ததால் தான் நான் தர்மயுத்தம் நடத்தினேன் என்று பன்னீர்செல்வம் தன்னிடம் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.
இதறகிடையில் பத்திரிக்கையாளர் உங்களுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய பன்னீர்செல்வம் மீண்டும் உங்களுடன் இணைந்து செயல்பட்டால் உங்களுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என்ற கேள்வியை எழுப்பியதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள் எனவும், ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது ஒற்றுமை இல்லாமல் பிரிந்து நின்றதன் காரணமாகத்தான் என்று கூறியுள்ளார். மேலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று தொண்டர்களிடம் இருக்கும் அதே மனநிலையை என்னிடமும் இருக்கிறது, பன்னீர்செல்வத்திடமும் இருக்கிறது. அதன் காரணமாகத்தான் நாங்கள் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.