திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார்.
இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து கடந்த 25ஆம் தேதி இரு குடும்பத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது இதில் இரு தரப்பினருக்கும் காயம் உண்டாகியுள்ளது. இது குறித்து 2️ தரப்பினரும் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்செழியன் விசாரணை செய்து மனு ரசீது வழங்கியிருக்கிறார்.
அதன் பின்னர் ராஜா நிர்மல் உள்ளிட்டோர் இடையே கடந்த 29ஆம் தேதி மறுபடியும் பிரச்சனை ஏற்ப்பட்டிருக்கிறது. இது குறித்து ராஜா மறுபடியும் காவல் நிலையத்தில் புகார் வழங்க வந்தார். ஆனால் காவல்துறையினர் அவரது புகாரை பெற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று தெரிவித்து காவல் நிலையம் முன்பாக ராஜா தன்னுடைய உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனடியாக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் லால்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிர்மல் மற்றும் அவருடைய மனைவி ஜெனிதா ஜாக்குலின்( 35) உள்ளிட்டோரை கைது செய்தனர். அதோடு ராஜா வழங்கிய புகாரின் பேரில் சரியான விசாரணை நடக்காத உதவி ஆய்வாளர் பொற்செழியனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி ஐ ஜி சரவண சுந்தர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.