நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த காலங்களில் தமிழ்நாடு மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த நிலையை மாற்றி, தற்போது அனைத்து தடைகளையும் உடைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளிலும் தேர்வு பெறுகிறார்கள். தரவரிசை பட்டியலில் முறையை கடைப்பிடிக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டைத் தாண்டி பிற மாநில மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் பிடித்து விடுகிறார்கள். அதுவும் குறிப்பாக முதுநிலை வகுப்புகளில் தமிழ்நாடு மாணவர்கள் பலரும் பிற மாநிலங்களில் பெரும் பங்கு வகித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு மாணவர்களுக்கு விளைந்துள்ள இந்த மாற்றங்களைச் சிறிதும் கணக்கில் கொள்ளாத பிற்போக்கு அரசியல்வாதிகள் மிக மிகக் குறுகிய கண்ணோட்டத்துடன் நீட் தேர்வு குறித்து தவறான எதிர் பிரச்சாரங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீட்டை ஒழிக்க வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றார்கள். ஆனால், அந்த நீட் ஒழிப்பு ரகசியத்தை வெளியே சொல்லாமலேயே தமிழ்நாடு மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சி, அதிகாரத்தில் சவாரி செய்து வருகிறார்கள்.
நீட் தேர்வு ஒழிப்பு குறித்த ஒரு குறிப்பிட்ட கட்சியின் தவறான வாக்குறுதியாலேயே மாணவச் செல்வங்கள் தங்களின் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் நீட் தேர்வு குறித்து உண்மையைப் பேசி இருந்தால் ஒரு உயிரிழப்பு கூட நிகழ்ந்து இருக்காது. எவர் விட்டு பிள்ளையோ அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. அன்றைய தினம் அனுதாப செய்திகளையும், பத்து லட்சம் பணமுடிப்புகளையும் கொடுக்கிறார்கள். ஓட்டுக்களை அள்ளி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொள்கிறார்கள். இந்த அநியாயம் நீண்ட காலம் நீடிக்காது. நீடிக்க அனுமதிக்கக் கூடாது.
இன்றைய நவீன உலகில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பல வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் ஆண்டொன்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் 10 லட்சம் மாணவர்களால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 10,000 மருத்துவ இடங்களில் அனைவரும் வாய்ப்பை பெற இயலாது என்பது எதார்த்தம். எனவே மாணவச் செல்வங்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் முன்னேறிச் செல்ல வழி காட்ட வேண்டியது ஒவ்வொரு சமூக பற்றாளர்களின் கடமையாக இருக்க வேண்டும்.
அதை விட்டு நீட்டை ஒழிப்பது என மாணவர்களுக்கு தவறான வழிகாட்டுதலை எவர் செய்தாலும் அவர்கள் தமிழ் மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர்கள் எனக் கருத வேண்டும். அந்த வகையில் நீட் தேர்வு குறித்த த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் கருத்துக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து தமிழ்நாடு மக்களிடத்திலும், மாணவர்களிடத்திலும் உண்மையை உரக்கச் சொல்லி வர வேண்டும். விஜயின் நீட் தேர்வு குறித்த குரலுக்கு புதிய தமிழகம் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.