சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் என்ற எலி யுவராஜ் (38) ஈஷா என்கின்ற ஈஸ்வரன் (33) இருவரும் ரவுடிகளாக வலம் வந்ததாக கூறப்படுகிறது. அதோடு இவர்கள் மீது கொலை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வடசென்னை பகுதியில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருக்கின்ற செட்டுகளில் மாமுல் வசூலிப்பது போன்ற குற்ற செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் திருப்போரூர் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஈஸ்வரன், யுவராஜ் உள்ளிட்ட இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த இருவரும் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர். இதனை தொடர்ந்து இருவரையும் தனிப்படையை அமைத்து காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்கள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு தெரியாததால் வடசென்னை இணை ஆணையர் ரம்யா பாரதி தலைமையில், தனி படை அமைக்கப்பட்டு தீவிரமாக அவர்களை தேடி வந்த நிலையில் ஈஸ்வரன், யுவராஜ் உள்ளிட்ட இருவரும் பெங்களூரில் பதிந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் விஜய் தலைமையில் தனி படை காவல்துறையினர் பெங்களூருக்கு விரைந்தனர்.
அங்கே நேற்று அதிகாலை ரவுடிகள் இருவரும் பதுங்கி இருந்த இடத்தை காவல்துறையினர் கண்டறிந்து அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்து கொண்ட ஈஸ்வரனும், யுவராஜும் காவல்துறையினரின் பிடியிலிருந்து தாக்கம் முயற்சி செய்தனர். ஆனாலும் அவர்களை துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற சமயத்தில் இருவரின் காலிலும் முறிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.