LPG Gas | வீட்டு சமையல் எரிவாயு பயனாளிகள் ஆதார் வாயிலாக உண்மைத் தன்மையை சரிபார்க்க தவறினால், சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்று பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தகுதியான பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியம் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக, எரிவாயு இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் சம்பந்தப்பட்ட விநியோக ஏஜென்சிக்கு சென்று பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு மூலம் ஆதார் சரிபார்ப்புப் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தமிழகத்தில் உள்ள சுமார் 2.40 கோடி வீட்டு எரிவாயு வாடிக்கையாளர்களில், ஏறத்தாழ 15 சதவீதம் பேர் இன்னமும் இந்தச் சரிபார்ப்புப் பணியை முடிக்காமல் உள்ளனர். இவர்கள் வரும் 16ஆம் தேதிக்குள் இந்தப் பணியை முடிக்குமாறு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் சரிபார்ப்புப் பணியை முடிக்காவிட்டால் சிலிண்டர் முன்பதிவு செய்ய இயலாது என்றும், வர்த்தக சிலிண்டர்களின் அதிகபட்ச விலையிலேயே வீட்டு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வாடிக்கையாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின.
குறிப்பாக, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ‘குறிப்பிட்ட கெடுவுக்குள் சரிபார்ப்பை முடிக்காவிட்டால் வீட்டுத் தேவைகளுக்கான கட்டணச் சலுகையைப் பெற முடியாது’ என குறுஞ்செய்திகள் வந்ததாகப் பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விளக்கமளித்துள்ள பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர், “வீட்டு எரிவாயு வாடிக்கையாளர்கள் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க வேண்டியது அவசியம் என்ற போதிலும், அதனை செய்யத் தவறினால் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாது என்றோ அல்லது வணிகச் சிலிண்டர் விலையில் தான் வாங்க வேண்டும் என்றோ கூறப்படும் வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
Read More : விஜயின் 2-வது திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா..! வீட்டில் நடந்த ரகசிய பேச்சுவார்த்தை..!



