சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே திருமண ஆசை காட்டி ஏமாற்றி, 7 மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண்ணைப் படுகொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கணாபுரம் அருகிலுள்ள தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தபோது சாக்கு மூட்டை ஒன்று மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொங்கணாபுரம் காவல் துறையினர், கிணற்றில் மிதந்த மூட்டையை கைப்பற்றிப் பிரித்துப் பார்த்தபோது, அதில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், சடலமாக கிடந்தவர் கருங்குள்ளன் வட்டம் பகுதியைச் சேர்ந்த பேராக்கவுண்டர் மகள் கோகிலா (23) என்பது உறுதி செய்யப்பட்டது. பட்டப்படிப்பு முடித்து வீட்டில் இருந்த கோகிலாவுக்கு கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டதால், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குடும்பத்தினர் விசாரித்தபோது, பக்கத்து ஊரைச் சேர்ந்த அம்மாசி (26) என்பவருடன் பழக்கம் இருந்ததாக கோகிலா கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஊர்த் திருவிழா முடிந்ததும் கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக அம்மாசி உறுதியளித்து, தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 31-ஆம் தேதி கோகிலாவை காணவில்லை என அம்மாசி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்த சூழலில், தற்போது அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கொங்கணாபுரம் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அம்மாசியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



