தமிழகத்தில் பல திருமணங்கள் மணமகளுக்கோ அல்லது மணமகனுக்கோ விருப்பம் இல்லாமல் தான் நடைபெறுகின்றன. அப்படி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு பின்பு அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள்.
அந்த வகையில், கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று மணப்பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன் திருமணம் என்பது நடந்து அதனை பதிவு செய்யாவிட்டாலும் அது செல்லத்தக்கது தான் என்றும், அந்த திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத்தான் ரத்து செய்ய முடியும் என்ற காரணத்தால், மனுதாரர் கூறியதன் அடிப்படையில் எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்திருக்கிறார்.
அதோடு விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்தால் மட்டும் அந்த திருமணத்திற்கு மதிப்பு கூடி விடுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்த நீதிபதி, இந்த திருமணத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்று மனுதாரருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.