விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியிருப்பதை அமெரிக்கா முதல்முறையாக பகிரங்கமாக உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளிப் படை வெளியிட்ட தகவலின்படி, எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் படைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட ‘ஸ்பேஸ் கண்ட்ரோல்’ ஆயுத அமைப்புகள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த வெளிப்படையான அறிவிப்பு, விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு சர்வதேச சட்டம் அனுமதி அளிக்கிறதா என்ற முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.
விண்வெளி தொடர்பான சர்வதேச விதிமுறைகளில் முக்கிய ஆவணமாக இருக்கும் 1967-ம் ஆண்டு ‘Outer Space Treaty’ எனப்படும் விண்வெளி ஒப்பந்தம், அணு ஆயுதங்கள் மற்றும் பிற பேரழிவு ஆயுதங்களை பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதை தடை செய்கிறது. மேலும், இத்தகைய ஆயுதங்களை விண்வெளியில் நிரந்தரமாக அமைப்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நிலவு மற்றும் பிற விண்வெளிப் பொருட்களில் ராணுவத் தளங்கள், கோட்டைகள் அல்லது ராணுவ நிறுவல்கள் அமைப்பதற்கும், ஆயுதச் சோதனைகள் மற்றும் ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்கும் ஒப்பந்தம் தடை விதிக்கிறது. ஆனால், பூமியின் சுற்றுப்பாதையில் அனைத்து வகையான பாரம்பரிய ஆயுதங்களையும் நிலைநிறுத்துவதை முழுமையாக தடை செய்யும் விதி இந்த ஒப்பந்தத்தில் இல்லை.
அமெரிக்கா தற்போது எந்த வகையான ஆயுதங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது என்பது குறித்த முழுமையான விவரங்களை வெளியிடவில்லை. அமெரிக்க விண்வெளிப் படையின் செய்தித் தொடர்பாளர், எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின் கூட்டு ராணுவப் படைகளை பாதுகாக்கும் திறன் கொண்ட ‘on-orbit space control weapons’ இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த ஆயுதங்களின் எண்ணிக்கை, அவை எந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, அவற்றின் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
‘Space control’ என்ற பிரிவில், நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்வெளி அமைப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி, எதிரிகளின் விண்வெளி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களும் அடங்கும். செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை மின்னணு முறையில் முடக்குதல் அல்லது தகவல் தொடர்பில் குறுக்கீடு ஏற்படுத்துதல் போன்ற தாக்குதல் சாராத தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில், அமெரிக்கா குறிப்பிட்டுள்ள ஆயுதங்கள் மின்னணு போர் தொழில்நுட்பமா, சைபர் திறனா, செயற்கைக்கோள்களை நேரடியாக அழிக்கும் ஆயுதமா அல்லது வேறு ஏதேனும் ‘counter-space’ தொழில்நுட்பமா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
பூமியின் சுற்றுப்பாதையில் பாரம்பரிய ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு முழுமையான தடை இல்லாததால், அவற்றை பயன்படுத்தும் விதம் சர்வதேச சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது என்று அர்த்தமில்லை. குறிப்பாக, ஆயுத மோதல் ஏற்பட்டால் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படையில் தாக்குதலின் அளவு, பொதுமக்கள் மற்றும் ராணுவ இலக்குகளை வேறுபடுத்துதல், தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஒரு செயற்கைக்கோளை நேரடியாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், அதிலிருந்து உருவாகும் விண்வெளிக் கழிவுகள் மிகப்பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். இத்தகைய கழிவுகள் பல ஆண்டுகள் அல்லது பல தசாப்தங்கள் வரை சுற்றுப்பாதையில் நீடித்து, பிற செயற்கைக்கோள்களுக்கும் விண்கலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, அந்த மோதலில் நேரடியாக ஈடுபடாத நாடுகளின் செயற்கைக்கோள்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான விண்வெளி அமைப்புகளும் இதனால் பாதிக்கப்படலாம். இதனால், விண்வெளியில் ராணுவ ஆயுதங்களின் பயன்பாடு தொடர்பான சர்வதேச சட்ட விவாதம் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
Also Read: மாதவிடாய்க்கு முன் இந்த அறிகுறிகளா?.. பெண்களே அலட்சியம் செய்யாதீங்க.. மருத்துவர் எச்சரிக்கை!



