தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்த விவகாரம் தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போதைய தவெக அரசின் செயல்பாடானது அனுபவமற்ற ஒருவர் மலைப்பாதையில் பேருந்தை ஓட்ட முயற்சிப்பதற்கு ஒப்பானது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
அரசியலிலும், நிர்வாகத்திலும் ஒரு கொள்கை முடிவின் மீதான மக்களின் பொதுப் பார்வை எவ்வளவு முக்கியமானது என்பதை ஆட்சியாளர்கள் உணரத் தவறிவிட்டதாக குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் ரூ.15,000 கோடி மதிப்பிலான 3 முக்கியத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்ட முக்கியத்துவத்தை மறைத்து, ரூ.150 கோடி மதிப்பிலான கார் விவகாரத்தைப் பெரிய பேசுபொருளாக மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
வட்டாட்சியர், பிடிஓ உள்ளிட்ட வட்டார அளவிலான அதிகாரிகளுக்கே வாகனங்கள் வழங்கப்படும் நிலையில், எம்எல்ஏ-க்களுக்கு வாகனம் வழங்குவது இயல்பான ஒரு நிர்வாக நடைமுறைதான் என்றாலும், அதனை ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்ற பாணியில் அணுகி அரசு தனக்குத்தானே பின்னடைவை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்தகைய சூழலை திமுக அரசு எவ்வாறு கையாண்டிருக்கும் என்பதை விளக்கிய அவர், மாவட்ட நிர்வாகத்திற்கு முதற்கட்டமாக கூடுதல் வாகனங்களை ஒதுக்கி, பின்னர் நிர்வாக ரீதியாகப் படிப்படியாக சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு மாற்றியமைத்து, உரிய நிதியை அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒதுக்குவதே முறையான அணுகுமுறையாக இருந்திருக்கும் என குறிப்பிட்டார். அரசியலில் ஒரு திட்டத்தின் நோக்கம் என்ன என்பதை விட, மக்கள் அதனை எவ்வாறு பார்க்கிறார்கள் என்ற உளவியலைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றும், ஆனால் இந்த அடிப்படைப் புரிதல் இல்லாமல் தவெக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்த தமிழ்நாட்டின் நிர்வாகத்தை எவ்வித முன் அனுபவமும் இல்லாதவர்களின் கையில் ஒப்படைத்திருப்பது பெரும் ஆபத்தானது என்று எச்சரித்த துரைமுருகன், பேருந்தை ஓட்டத் தெரியாத ஓட்டுநருக்குப் பக்கத்தில் நின்று பலரும் பலவிதமான ஆலோசனைகளைக் கூறுவது போல் இந்த ஆட்சி நடப்பதாகவும், செங்குத்தான வளர்ச்சிப் பாதையிலிருந்து இறங்குவது சுலபம் ஆனால் மீண்டும் ஏறுவது மிகக் கடினம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Read More : RIP | திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு..!! சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்..!!


