சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றத் திணறும் தவெக அரசு, ரூ.1200 கோடி செலவில் அவசர கதியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறிவிட்டு, அதைவிடக் கடுமையான போக்குவரத்து நெரிசலும் இடப்பற்றாக்குறையும் கொண்ட பட்டினப்பாக்கத்தைத் தேர்வு செய்தது மக்களின் தேவைக்காகவா அல்லது முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காகவா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்த குறுகிய சாலைகளைக் கொண்ட இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைந்தால், பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் தினசரி கடும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுனாமி தாக்கும் அபாயமும், புவி வெப்பமயமாதலால் எதிர்காலத்தில் கடல்மட்டம் உயர்ந்து வெள்ளம் சூழும் ஆபத்தும் உள்ள கடலோரப் பகுதியில் 100 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டம் என்று கூறுவது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ள அவர், முதல்வர் ஆவதற்கு முன்பு வீட்டிற்கு அழைத்துச் சந்தித்தது போல் இப்போது தலைமைச் செயலகத்தையே தன் வீட்டிற்கு அருகில் அமைக்க முற்படுவது ‘துக்ளக் தர்பார்’ நிர்வாக முறை எனவும் விமர்சித்துள்ளார்.
9 மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், பரந்தூர் வானூர்தி நிலையம் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து நின்றது போல் இதையும் உறுதியாகத் தடுத்து நிறுத்துவோம் என்றும் சீமான் மீனவ மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
Read More : தாமதமாகும் பென்ஷன் தொகை..!! என்ன காரணம்..? எப்போது பணம் கிடைக்கும்..? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!



