காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு பொறித்த உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது மனைவியோ அடிக்கடி, ஏன் தினமும் சாம்பாரே சமைத்து கொடுத்துள்ளார். இந்த ஒரு காரணத்தினாலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவும் ஆகாஷின் மனைவி சாம்பாரை சமைத்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நள்ளிரவு வரை இந்த வாக்குவாதம் நீடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், உடனடியாக 112 என்ற அவசர சேவை எண்ணை அழைத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தகராறுக்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போது, “எனக்குப் பிடித்த உணவுகளை என் மனைவி சமைக்காமல் தினமும் சாம்பாரே சமைத்து தருகிறார்” என்று ஆகாஷ் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, போலீசார் இருவரையும் அமர வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற சிறிய காரணத்திற்காக இவ்வளவு பெரிய தகராறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சமரசத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, போலீசார் புகாரை முடித்து வைத்தனர். தினமும் சாம்பாரே சமைத்து தருவதாக மனைவி மீது ஒருவர் 112 அவசர சேவைக்கு புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



