நாமக்கல் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த 24 வயது இளைஞரை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற இடத்திற்கு அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தைச் சார்ந்த 24 வயது இளைஞர் சசிகுமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று இருக்கிறார் சசிகுமார். அப்போது அவரை சுற்றி வளைத்த நான்கு பேர் கொண்ட கும்பல் சர மாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் சசிக்குமார். இச்சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யும் வரை சசிகுமாரின் பிரேதத்தை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மிக தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.