பெண் என்பதற்காக மட்டுமே வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பல ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் பணிக்கு தகுதி இருந்தும் நியமனம் மறுக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பெண் என்பதைக் காரணமாகக் கொண்டு வேலைவாய்ப்பை மறுப்பது அவரது கண்ணியத்தையும் பெண்மையையும் அவமதிக்கும் செயல் என நீதிமன்றம் கடுமையாகக் குறிப்பிட்டது.
குடா கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி பாட்டிலிங் ஆலையில் பணியாற்றுவதற்கான தேர்வில் பங்கேற்றார். அங்கு காலி பணியாளர், பியூன் அல்லது சிலிண்டர் நிரப்பும் உதவியாளர் பணிக்காக நடைபெற்ற நேர்காணலில் அவர் கலந்துகொண்டார்.
உள்ளூர் துணை ஆணையர் தலைமையிலான குழு, வேலைவாய்ப்புக்காக பரிந்துரைத்த 49 பேரில் அந்தப் பெண்ணும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு மட்டும் பணி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் 43 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து அவர் கீழமை நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பெண் பணிக்கான தகுதிகளை பூர்த்தி செய்திருந்ததுடன், பெண் என்பதன் காரணமாகவே வேலை மறுக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இருப்பதாகக் கண்டறிந்தது. இதனால், தொழிலாளர் பணிக்கு பதிலாக காலிப்பணியாளர், நிர்வாக அல்லது பியூன் பணியில் அவரை நியமிக்க உத்தரவிட்டது.
ஆனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை மாற்றியது. வேலைவாய்ப்புக்கான பரிந்துரை மட்டுமே செய்யப்பட்டிருந்ததே தவிர, அவர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அவர் நேர்காணலில் பங்கேற்ற பணிக்கு மாறாக வேறு பதவியில் நியமிக்க கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திலும் வழக்கு சென்றது. கடந்த 2025 அக்டோபர் 14-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் மட்டும் பணிநியமனத்திற்கான சட்ட உரிமை உருவாகாது என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. பாலின அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மட்டும் கட்டாய நியமனத்துக்கு போதுமான காரணமாக அமையாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியது. விசாரணையின்போது, சிலிண்டர்களைத் தூக்குவது உள்ளிட்ட உடல் உழைப்பு மற்றும் இரவு நேரப் பணி ஆகியவை காரணமாக அந்தப் பெண் பணிக்கு பொருத்தமற்றவர் என அதிகாரிகள் கருதியிருக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், 49 பேர் கொண்ட குழுவின் பரிந்துரை கட்டாயமானது அல்ல என்றும் நிறுவனத்தின் தரப்பு வாதிட்டது.
இந்த வாதங்களை முன்வைத்து வழக்கை மத்தியஸ்தத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் அதனை உச்சநீதிமன்ற அமர்வு ஏற்கவில்லை.
இதற்கிடையில், பல ஆண்டுகளாக வழக்கைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண் தற்போது ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்டார். எனவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பணிநியமனம் வழங்குவதற்குப் பதிலாக, அவருக்கு மொத்த இழப்பீடாக ரூ.12 லட்சம் வழங்குவது பொருத்தமானது என உச்சநீதிமன்றம் முடிவு செய்தது.
பெண்கள் வீட்டிலேயே எல்பிஜி சிலிண்டர்களை கையாளும் நிலையில், ஒரு பெண் என்பதற்காக மட்டுமே சிலிண்டர்களைத் தூக்கும் பணிக்கு தகுதியற்றவர் எனக் கருத முடியாது என்ற கருத்தையும் நீதிபதி அரவிந்த் குமார் விசாரணையின்போது பதிவு செய்தார். அரசு நிறுவனமே பாலின அடிப்படையில் இத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
Also Read: 13 மசோதாக்கள்… 12-க்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றில் மட்டும் நீடிக்கும் பரிசீலனை! காரணம் என்ன?



