பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வளவு கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவற்றை தாண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்க தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆனால் இது போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நடந்தால் கூட ஒரு வகையில் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தன்னுடைய சொந்தங்கள் மூலமாகவே குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் உண்டாவது மாபெரும் கொடுமையாகும்.
அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியின் 13 வயது மகள் தன்னுடைய தாத்தாவின் பராமரிப்பில் படித்து வந்திருக்கிறார்.
சென்ற 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்த சிறுமியை அந்த சிறுமியின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்கள், சித்தப்பாக்களின் மகன்கள் இருவர் என மொத்தமாக 6 பேர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக ஒரு அதிர்ச்சி புகார் காவல்துறையினருக்கு வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அந்த புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் ராஜலட்சுமி குற்றம் சுமத்தப்பட்ட சிறுமியின் தாத்தா மற்றும் 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு சித்தப்பாவின் மகன்களில் ஒருவருக்கு 10 வருட கால சிறை தண்டனையும், மற்றொருவருக்கு 5 வருட கால சிறை தண்டனையும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசின் சார்பாக 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.