கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி!.. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..

2215affe95594a9d1393159fa8e40a88b1f9bcc6d1bb477a5ccff21a5b5ef252

மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சாகர் மாவட்டத்தின் பண்டா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பண்டா சுற்றுவட்டார கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கு அடுத்தடுத்து உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி, சாகர் மாவட்ட மருத்துவமனை மற்றும் பண்டா சிவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துர்மர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மகேஷ் ராவத், திங்கட்கிழமை காலை பண்டா சிவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல் சப்ரி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது ஷியாம் பாய் அஹிர்வார், சாகர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது.

தற்போது 109 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 85 பேர் புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 17 பேர் சாகர் மாவட்ட மருத்துவமனையிலும், 7 பேர் பண்டா சிவில் மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரை விமானம் மூலம் போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பெரும்பாலானோரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருந்துகள், டயாலிசிஸ் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கள்ளச்சாராய விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டவர்களை குறிவைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கிராமத்தில் சுமார் 8 பேர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற மதுபான ஒப்பந்ததாரர்களான சித்தார்த் குஷ்வாஹா மற்றும் யஷ்வந்த் தாக்கூர் ஆகியோரின் பெயர்களும் புகாரில் இடம்பெற்றுள்ளன.

பண்டா மற்றும் விநாயகா காவல் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் எங்கிருந்து பெறப்பட்டது, யார் மூலம் விநியோகிக்கப்பட்டது என்பதைக் கண்டறிய போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த கள்ளச்சாராய விபரீதம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Also Read: பாத்ரூமில் 2 கள்ளக்காதலர்களுடன் மனைவி செய்த காரியம்!… ஜன்னல் வழியாக பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Saranya

You May Like