உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், தேவையற்ற பயணங்களை குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் பிரதமர் மோடி விடுத்த அழைப்புக்கு பல இந்திய நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதற்கு பதிலளித்த நிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக Zoho பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் நிறுவனர் ஸ்தர் வேம்பு அலுவலகப் பணிமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, மீண்டும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஒரு வார கால உள் ஆலோசனைகள் மற்றும் விவாதங்களுக்குப் பிறகு, ஸோஹோ நிறுவனம் வீட்டிலிருந்து வேலை முறையை விரிவுபடுத்தாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு விளக்கமளிக்கையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகளில் நேருக்கு நேர் இணைந்து பணியாற்றுவது அதிக உற்பத்தித்திறனை அளிப்பதாகக் கூறினார். குறிப்பாக பொறியியல் குழுக்களுக்கு அலுவலக சூழல் முக்கியம் என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அரசின் எரிபொருள் சேமிப்பு மற்றும் நிலைத்தன்மை நோக்கங்களை பின்பற்றும் வகையில் பல புதிய திட்டங்களை நிறுவனம் செயல்படுத்த உள்ளது. ஊழியர்களின் பயணங்களுக்கு மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதுடன், வளாக உணவகங்களில் மின்சார சமையல் மற்றும் சூரியசக்தி பயன்பாடுகளும் அதிகரிக்கப்படுகின்றன.
மேலும், நிறுவன வளாகங்களில் சூரிய ஆற்றல் முதலீடுகளையும் பெரிதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும் என நிறுவனம் நம்புகிறது. இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வீட்டிலிருந்து வேலை செய்வதை ஆதரிப்பவர்கள், தினசரி பயணம் நேர விரயம் மற்றும் மனஅழுத்தத்தை அதிகரிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலர், “முழுமையான மின்சார போக்குவரத்து அமைப்பு உருவாகும் வரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தினமும் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை சுற்றுச்சூழலுக்கும் ஊழியர்களின் நலனுக்கும் சவாலாக இருக்கும்” என விமர்சித்துள்ளனர். மற்றொரு தரப்பு, நேருக்கு நேர் பணியாற்றும் சூழல் குழு ஒத்துழைப்பையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் என ஸோஹோவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.



