கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு சமயங்களில் முகமூடி மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்திலும் மற்றும் 4 சக்கர வாகனத்திலும் சென்று பூட்டி இருக்கின்ற வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் காவல்துறை ஆய்வாளர் பாண்டியன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் தொழில்நுட்ப உதவவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வட பொன்பரப்பி அருகே உள்ள புதூர் கூட்டு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட சமயத்தில் அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் வருகை தந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்தபோது சென்னை பெரம்பூர் புது காலனியை சேர்ந்த கார்த்திக் (19) சென்னை, எருக்கஞ்சேரி பாலாஜி (23) சென்னை நேரு நகரை சேர்ந்த சிந்து (22) உள்ளிட்ட நபர்கள் தான் அந்த காரில் வந்தது என தெரிய வந்திருக்கிறது.
அதோடு, அவர்கள் தேவ பாண்டலம் மற்றும் பகண்டை கூட்டு ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி ரிஷிவந்தயம், வட பொன்பரப்பி, தியாகதுருவம், சங்கராபுரம், மூங்கில் துறைப்பட்டு, கீழ்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு சமயங்களில் பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றதும் திருக்கோவிலூர் அருகே கனகந்தல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது.
மாவட்டத்தில் இது போன்ற தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களிடமிருந்து வீட்டுமனை, கார், இருசக்கர வாகனம், உள்ளிட்ட 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.