அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற தலைப்பின் கீழ் திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பேரணியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை பணியை மேற்கொள்ள உள்ளனர். ஜூலை 3ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 68,000 வாக்கு சாவடிகளிலும் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம்களை வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி முகவர்கள் மற்றும் இன்னும் பிற அணிகள் சேர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் சென்று உறுப்பினர்களை சேர்க்க உள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபின் அமைதியாக இருந்த செந்தில் பாலாஜி தற்பொழுது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், மாற்றுக்கட்சியினர் மற்றும் இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.