ஐஐடி மெட்ராஸ்-ன் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த முன்முயற்சியை சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய தமிழ்நாடு அரசின் துறைகள் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்த உள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் ஐஐடி மெட்ராஸ்-ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே இந்த கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
இக்கூட்டு முயற்சியின் வாயிலாக அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்துதல், மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குதல், பாதுகாப்புக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான விபத்து விசாரணை அறிக்கை மற்றும் ஆபத்தான இடங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பித்தல். அனுபவ ரீதியான ஆய்வுகளை நடத்துவதற்கான வடிவமைப்பு, தரவு சேகரிப்பில் இடைவெளியைக் கண்டறிதல், தரவுச் சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் தெளிவான நெறிமுறைகளை வகுத்தல், அமலாக்கத்திற்கான வியூகங்களை வகுக்க ஏதுவாக தரவு சார்ந்த மேம்பாட்டு முறைகளைப் பரிந்துரைத்தல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள் ஆகும்.