தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் உள்ளிட்டோரிடையே மீதம் கொடுக்க வேண்டிய 400 ரூபாய்காக தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த அந்த பகுதியை சார்ந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இருந்தாலும் கோபம் குறையாத காசிராம் காலை 10 மணி அளவில் சீனிவாசை சாலையில் வந்து கொண்டிருந்த லாரியின் மீது தள்ளிவிட்டு இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீநிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.