மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கால்நடைகளை வளர்ப்பவர்களின் இல்லத்திற்கே விரைவாக சென்று இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் 29 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளையும், மையப்படுத்தப்பட்ட கால் சென்டரையும் திறந்து வைத்து பின் பேசிய அவர், இந்த புதிய சேவையின் மூலம் அதிகளவில் உற்பத்திப் பொருட்களை தரும் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும். பொதுவாகவே கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள கால்நடை மருத்துவமனைகளை அணுகுவதற்கு அதனை வளர்ப்பவர்கள் அதிக ஆர்வம் காட்டாத நிலை இருந்தது. தற்போது இந்த நடமாடும் கால்நடை மருத்துவமனைக் கிளைகளில் ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் துணை கால்நடை மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழு நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சேவை செய்யும் என்றார்.
மேலும் இதன் மூலம் பால்வளத்துறையானது வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெற்று கேரள மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் என்று மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கால் சென்டர் ஹெல்ப் லைன் எண்:1962-ஐ கால்நடை உரிமையாளர்கள், தொலைபேசி மூலம் அழைக்கலாம். அவசர மருத்துவ சேவைத் தேவைப்படும் கால்நடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு நடமாடும் கால்நடை மருத்துவமனைக் கிளை சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளரின் இல்லத்திற்கு செல்லும் என்றார் .