சென்னை மாநகர பகுதியில் உள்ள ஏர்ணாவூர் காமராஜர் நகரில் ஷாலினி (27) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி பகுதியில் சென்றுவிட்டு பணி முடித்து விட்டு, இரவு வீடு திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார ரயிலில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார் ஷாலினி. மேலும், ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வரையில் தனது அண்ணனுடன் செல்போன் பேசி கொண்டு ரயில் தண்டவாளத்தின் அருகே ஒரு ஒரமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார் ஷாலினி.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலினி மீது மோதியது. பலத்த காயம் காரணமாக ஷாலினி உயிருக்கு போராடினார். நீண்ட நேரமாகியும் செல்போனை எடுக்காததால் ஷாலினியை குடும்பத்தினர் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தேடினர்.
மேலும், அங்கே உயிருக்கு போராடிய நிலையில் ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அனுமதிக்கப்பட்டு பின் மருத்துவர்கள் ஷாலினியை பரிசோதித்து பார்த்தனர். ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.