பொதுமக்கள் கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து பார்ப்பது மருத்துவர்களை மட்டும் தான். இன்னும் சொல்லப்போனால் தங்களுக்கு ஏதாவது உடலளவில் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் சாதாரண பாமர மக்கள் முதல் பெரிய பணக்காரர்கள் வரையில் கை கூப்பி நிற்பது முதலில் மருத்துவர்களிடம்தான். அதன் பிறகு தான் உடல் நலம் பெற வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வருவார்கள்.
அப்படிப்பட்ட மருத்துவர்கள் எந்த அளவிற்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது யாருக்கும் தெரியாத விஷயம் கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட மருத்துவர்கள் தவறு செய்தால் என்ன நடக்கும்?
கடந்த 2013 ஆம் ஆண்டில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ப்ளோரா என்ற பெண்ணின் கருப்பையில் கட்டி வளர்ந்து வருவதாக தெரிவித்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது அதன் பின்னர் அடிவயிற்றில் வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டதால் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை செய்தபோது பெருங்குடலில் நிரந்தரமான சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கில் 40 லட்சம் ரூபாயும் அதற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியையும் சேர்த்து இழப்பீடாக வழங்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.