பாலியல் ரீதியான அத்துமிரல்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற வண்ணம் தான் இருக்கிறது.அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு தமிழக அரசு அறிவுறுத்தினாலும் அதன் பேரில் காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை இது போன்ற சமூக விரோத செயலை ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என்பதே பொதுமக்களின் ஆதங்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவர் நேற்று இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது அவருடைய கேட் கீப்பர் அறைக்குள் நுழைந்த ஒரு மர்ம நபர் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டத்தை அடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையைச் சார்ந்தவர்கள் வழக்கு பதிவு செய்து ரயில்வே கேட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
பாவூர்சத்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பிரதான சாலையில் ரயில்வே பெண் ஊழியருக்கு நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.