திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் குமுளூரை சார்ந்த இளைஞர்கள் சிலருக்கும் பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஏற்பட்ட இந்த மோதல் கைகலப்பில் முடிந்தது.
இந்த சண்டையில் உள்ளூர் இளைஞர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஊர் இளைஞர்கள் 15 பேர் திரண்டு வந்து கல்லூரி கேன்டினுக்குள் புகுந்து மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கல்லூரியில் இல்லாததால் பேராசிரியர்கள் வந்து இளைஞர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிறகனூர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் கல்லூரிக்கு வந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊர் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.