தர்மபுரி மாவட்டத்தில் வீட்டிலேயே கரு சோதனை மையம் நடத்தி பெண் சிசு கருக்கலைப்பு செய்து வந்த மருத்துவ கும்பலை அம்மாவட்ட காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் சிசுவிலேயே கண்டறிந்து கொலை செய்யப்படுவது பரவலாக நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி சட்டவிரோதமாக மருத்துவம் பார்ப்பவர்களையும் பெண் சிசுக்களை சட்டவிரோதமாக கொலை செய்பவர்களையும் கண்டறிந்து அவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் தர்மபுரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் மருத்துவத் துறையினரும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தர்மபுரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சாந்திக்கு மொரப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு கும்பல் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அவர் தனது மருத்துவ ஊழியர்களுடன் அரசாங்க வாகனத்தில் செல்லாமல் தனியார் வாகனத்தில் சென்று அப்பகுதியில் சோதனையிட்டார். அப்போது வகுந்தனூர் கிராமத்தில் சாக்கம்மாள் என்பவருடன் இணைந்து கவியரசன் ஐயப்பன் மனோஜ் குமார் ஆகியோர் இணைந்து சட்டத்திற்கு புறம்பாக கருவின் பாலினம் அறியும் ஸ்கேன் வசதியும் கருக்கலைப்பும் செய்து வருவது தெரிய வந்தது. இதன் மூலம் அவர்கள் வீட்டிலேயே விலை உயர்ந்த ஸ்கேன் வைத்து கருவிலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து பெண் குழந்தையாக இருந்தால் அங்கேயே வைத்து பெண் சிசுக்கொலையும் செய்துள்ளனர். சில நேரங்களில் வெளியில் அழைத்துச் சென்று அதற்கு கமிஷன் வாங்கியும் கருக்கலைப்பு செய்திருக்கின்றனர். இந்த நடவடிக்கைகளை கவனித்த மருத்துவ இயக்குனர் அந்த வீட்டிற்குள் நுழைய முற்படும்போது சாக்கம்மாள் விடாமல் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் அந்த நால்வரையும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கும்பலிடமிருந்து ஏழு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்கேன் மெஷின் 18 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .